இழைவியக்கம்

தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும் பயன்பாடும் தமிழ்மணம் திரட்டியின் நிர்வாகி முனைவர் சொ.சங்கரபாண்டி
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் பேராசிரியர் இளங்கோ
தமிழ்க் கணினி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு
புதுச்சேரியில் தமிழ்க் கணினி விழிப்புணர்வு முகாம்
இணையத்தில் தமிழ் வளர்ச்சியும், பயன்பாடும் - தமிழ் சசி.

செவ்வாய், 4 டிசம்பர், 2012

புதுச்சேரியில்: கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு விளக்கக் கூட்டம்

 அனைவருக்கும் வணக்கம்,

சென்னையில் வரும் டிசம்பர் 16 அன்று நடைபெற உள்ள கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டு விளக்கக்கூட்டம் புதுச்சேரியில் வரும் 5 டிசம்பர் 2012 இல் நடைபெற உள்ளது. அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

இரா.சுகுமாரன்
ஒருங்கிணைப்பாளர்,
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

 

திங்கள், 3 டிசம்பர், 2012

தமிழ் வளர்ச்சித் திட்டத்துக்கென ஓர் ஆணையம் அவசியம்: தினமணி செய்தி

First Published : 03 December 2012 12:43 PM IST
தமிழகம், புதுச்சேரியில் தமிழ் வளர்ச்சித் திட்டத்துக்கென ஓர் ஆணையம் உருவாக்க வேண்டும் என்று புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் வலியுறுத்தியுள்ளது.

 இது குறித்து இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரா.சுகுமாரன் வெளியிட்ட அறிக்கை:
 தொன்மை, வரலாற்றுத் தொடர்ச்சி, இலக்கிய வளம், இலக்கணச் செல்வம் கொண்டது தமிழ்மொழி. ஆனாலும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளில் ஒன்றாக இன்று வரை அறிவிக்கப்படாமல் உள்ளது. தற்போது கணினி காலத்தில் அரசு நிறுவனங்களும், மக்களும் தகவல் பரிமாற்றத்துக்கு கணினியையே பயன்படுத்தி வருகின்றனர். இந்தி மொழியை அடிப்படையாக வைத்து பிறமொழிகளை கணினியில் பயன்படுத்துவதற்கான அனைத்து வசதிகளையும் உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

 அதாவது இந்தியைப் பிறமொழி பேசும் மக்கள் அனைவரும் கணினி வழியே கற்பதற்கான மென்பொருளை உருவாக்குதல், இந்தி மொழி பேசாத மக்கள் ஆங்கிலத்தில் அளிக்கும் தகவல்களை இந்தியில் மொழி பெயர்த்து தரும் கணினி வழி மொழிபெயர்ப்பு மென்பொருள்களை உருவாக்குதல், கணினியின் இந்தியைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை அளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது.
 மேற்கூறிய நோக்கங்களுக்கான மத்திய அரசின் தகவல் தொழில் நுட்பத்துறை உள்பட அனைத்து துறைகளிலும் பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 மத்திய அரசு, தமிழ் உள்பட அனைத்து மொழிகளையும் சமமாக பாவித்து இது போன்ற தொழில் நுட்பங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கணினித் தமிழ் ஆராய்ச்சிக்கு இந்தி மொழியை மையமாக வைத்து ஆய்வு செய்வதற்கு நிதி அளிக்கப்படுகிறது. தனியாக தமிழை ஆய்வு செய்ய நிதி அளிக்க வேண்டும்.

 தமிழக மற்றும் புதுச்சேரி அரசுகள் தமிழ் வளர்ச்சித் திட்டத்துக்கென தனியாக ஓர் ஆணையம் அமைக்க வேண்டும். தமிழை எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஏற்ற வகையில் வலுப்படுத்தும் ஆணையமாக அது இருக்க வேண்டும்.

 திட்டமிட்ட முறையில் தமிழ் வளர்ச்சித் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அந்த ஆணையத்தின் கீழ் கணினித் தமிழ் வளர்ச்சிப் பிரிவு ஒன்றை அமைக்க வேண்டும். கணினித் தமிழ் வளர்ச்சிக்கென அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். மின்-ஆளுகை, மின் கல்வி, மின் வணிகம் போன்ற பல முனைகளில் தமிழ் செயல்பட வழி வகுக்க வேண்டும்.

 தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் கணினிகள், அலைபேசிகள் போன்ற மின்னணுக் கருவிகள் தமிழைப் புழங்கும் கருவிகளாக இருக்க வேண்டும். தமிழைப் புழங்கும் கருவிகளுக்கு விற்பனை வரிச் சலுகையும், தமிழை புழங்காத கருவிகளுக்கு கூடுதல் விற்பனை வரியும் விதிக்கப்பட வேண்டும்.

 இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கணினித் தமிழ் வளர்ச்சி குறித்து விளக்க கூட்டம் புதுச்சேரி வணிக அவையில் புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெறுகிறது. இக் கூட்டத்தில் சென்னையில் வரும் டிசம்பர் 16-ம் நடைபெறும் மாநாடு குறித்தும் விளக்கப்பட உள்ளது. இக் கூட்டத்தில் தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்க உள்ளனர் என்றார்.

ஞாயிறு, 4 நவம்பர், 2012

இரவி – இராசன் – சரவணக்குமார் கைது: கருத்துரிமை மீதான காவல்துறை தாக்குதல் - கி.வெங்கட்ராமன்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் கீழ்க்கண்ட இக்கருத்தை மிகவும் வரவேற்கிறது. இந்த கருத்துகளை எமக்கும் மிகவும் உடன்பாடான கருத்து என்பதால் இதனை முன்வைத்து பொது விவாதத்திற்குட்படுத்த வேண்டும் எனக்  கருதுகிறோம்.

மேலும்,  இந்த  சட்டம் எல்லோருக்குமானதல்ல. "சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லை என்ற அரச உண்மையைத்தான் இது காட்டுகிறது."  என்று கீழே இந்த சட்டத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளது முற்றிலும் உண்மையாகும். எனவே "இந்த தகவல் தொழில் நுட்பச் சட்டத்தினை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டும்" என்ற கோரிக்கையையும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் முன்வைக்கிறது. எனவே, இந்த கருத்தை முன்வைத்து செயல்படவேண்டுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.
...................................................

இரவி – இராசன் – சரவணக்குமார் கைது:
கருத்துரிமை மீதான காவல்துறை தாக்குதல்
கி.வெங்கட்ராமன்

அராபிய வசந்தம் எழுச்சிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார நாடுகளும், ஏகாதிபத்தியங்களும் சமூக ஊடகத்தின் மீது தங்களது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. இந்திய ஏகாதிபத்தியம் இதற்கான சட்டங்கள் இயற்றியுள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தில், அண்மைக் காலத்தில் திருத்தங்கள் செய்து, அடக்குமுறைக்கான தனது ஆயுதங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

இந்திய ஏகாதிபத்தியத்தின் கங்காணி ஆட்சியாளர்கள் காவல்துறையை ஏவி இச்சட்டத்தின் கோரத்தன்மையை சனநாயக சக்திகளுக்கு புரிய வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்தை திறனாய்வு செய்து எழுதியதற்காக புதுச்சேரியைச் சேர்ந்த சிறுதொழில் முனைவர் இரவி சீறிதர் என்பவர் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ், புதுவை இணையக் குற்றத்துறைக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கார்த்தி சிதம்பரம் வதேராவை விட அதிகம் சொத்துகளைக் குவித்துவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன என்று கடந்த 2012 அக்டோபர் 20ஆம் நாள், தனது ட்விட்டர் இணையப் பக்கத்தில், புதுவை இரவி கருத்துப் பதிந்திருக்கிறார். இதன் மீது, கார்த்தி சிதம்பரம் புதுவை காவல்துறைத் தலைவரிடம் மின்னஞ்சல் புகார் அளித்ததனடிப்படையில், இரவியை புதுவை காவல்துறையினர் கைது செய்தனர். உடனடியாக, அவருக்கு பிணை கிடைத்தது என்பது ஒரு ஆறுதல்.

பாடகி, நிகழ்ச்சித் தொகுப்பாளர் சின்மயி புகார் மீது, இராசன், சரவணக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பது, சமூக ஊடகத்திலும், கருத்துரிமை, சமூக நீதி, பெண்ணுரிமை பற்றி அக்கறையுள்ளோரிடையேயும், ஒரு விவாதப்புயலைக் கிளப்பியுள்ளது.

அரசியல் அரங்கமாயினும், சமூகத்தின் எந்தப் பொதுவெளியாயினும், அங்கெல்லாம் பெண்கள் தலையிடும் போது, அவர்கள் மீது பாலியல் வகைப்பட்ட தாக்குதல்களும் துன்புறுத்தல்களும் நிகழ்வது இன்னும் பொதுப் போக்காக நீடிக்கிறது. அந்தவகையில், சின்மயி தெரிவித்த பிற்போக்கான கருத்துகளுக்கு எதிரான விவாதத்தில், அவரை பெண் என்ற முறையிலோ, தனிப்பட்ட முறையிலோ, அவர் குடும்பத்தாரை இழிவு படுத்தியோ, எழுதுவதை நாம் ஏற்கவில்லை. யாரும் ஏற்க முடியாது.

அவ்வாறு, சின்மயி குறித்து இராசனோ, அல்லது வேறு யாருமோ கருத்துக் கூறியிருந்தாலும், அது கண்டிக்கத்தக்கது.

ஆனால், இதன் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள கைது நடவடிக்கைகளும், இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கொடுமையான தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளும் தாம், இங்கு கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியது ஆகும்.

எந்தவொருவரும் தாங்கள் தனிப்பட்ட முறையில், ஊடகங்கள் வாயிலாக, பொது நிகழ்ச்சிகளின் மூலமாக தாக்கப்படுவதாகவோ, அவதூறு செய்யப்படுவதாகவோ கருதினால் அதன் மீது தக்க ஆதாரங்களோடு, அவதூறுத் தடுப்பு வழக்கு தொடுக்கலாம். இதைக் கூட, முதலமைச்சர் செயலலிதா சகட்டுமேனிக்கு அனைவர் மீதும் உள்நோக்கத்தோடு, அதுவும் அரசு செலவில் பயன்படுத்தி வருவதைப் பார்க்கிறோம்.

ஆயினும், தனிப்பட்ட நபர்கள் குறிப்பாக அரசு அதிகாரத்தில் இல்லாதவர்கள், குற்றவியல் சட்டப்படி அவதூறு வழக்குத் தொடுத்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கும், குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த அடிப்படையில், கார்த்தி சிதம்பரமோ, சின்மயியோ வழக்குத் தொடுத்து அதன் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டிருந்தால், அதுபற்றி அதிகம் நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால், தகவல் தொழில்நுட்ப சட்டம், அது போன்ற கொடும் சட்டப்பிரிவுகள் ஆகியவை மேற்சொன்ன வழக்குகளில் பயன்படுத்தப்பட்டிருப்பது, கருத்துரிமை மீது அக்கறையுள்ள அனைவரும் கவனம் கொள்ளத்தக்க ஒன்றாகும்.

தமிழத்திலும், புதுவையிலும், இச்சட்டத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பவர்கள் பொதுத் தளத்தில் மக்கள் பிரச்சினைகள் மீது விவாதங்கள் எழுப்பி கருத்துப் பரப்பலில் ஈடுபட்ட செயல்பாட்டாளர்கள் ஆவர். இங்கு மட்டுமின்றி, இந்தியாவின் வேறு பகுதிகளிலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் காவல்துறையின் தாக்குதல்களுக்கு ஆளானவர்கள் சமூகச் செயல்பாட்டாளர்களே ஆவர்.

எடுத்துக்காட்டாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்ணியமான முறையில் திறனாய்வு செய்து வெளியான ஒரு கேலிச் சித்திரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து பரப்பினார் என்பதற்காக, கடந்த 2011 ஏப்ரலில் மேற்கு வங்க ஜாதவ்பூர் பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் அம்பிகேஷ் மகாபாத்ரா கைது செய்யப்பட்டது பலருக்கும் நினைவிருக்கும்.

ஊழல் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்தி, கேலி சித்திரம் வரைந்து இணையங்களில் பரப்பியதற்காக ஓவியர் அசீம் திரிவேதி 2012 செப்டம்பரில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படியும், அரசுக்கு எதிராகப் போர் புரிவதாக குற்றம்சாட்டியும் கைது செய்யப்பட்டு பெரும் போராட்டத்திற்குப் பிறகு, அவர் மீதான குற்றப்பதிவுகள் குறைக்கப்பட்டதை நாடறியும்.

ஏடுகளும், தொலைக்காட்சிகளும் பெரும்பாலும் பெருமுதலாளிகளாலும், அரசியல் புள்ளிகளாலும் நடத்தப் படுகின்றன. இவை முதலாளிய நிறுவனங்களின் விளம்பரங்களைச் சார்ந்தே பெரிதும் இயங்குகின்றன. முதன்மை ஊடகவியலாளர்கள் பலர் அரசியல் தரகர்களாகவும், ஒட்டுண்ணி அரசியல் வலைப்பின்னலில் உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். இக்காரணங்களால் ஏடுகளும், தொலைக்காட்சிகளும் மக்கள் சார்ந்த கருத்து விவாதத்திற்கு வரம்புக்குட்பட்டே பயன்படுகின்றன.

இந்நிலையில், மக்கள் நலம் சார்ந்த கருத்துப் பரப்பலுக்கு, உற்றவழியாக ட்விட்டர், முகநூல், வலைப்பதிவகள் போன்ற சமூக ஊடகங்களே திகழ்கின்றன. தமிழகத்திலும், முல்லைப் பெரியாறு, கூடங்குளம், மூன்றுத் தமிழர் சாவுத் தண்டனை போன்ற சிக்கல்களில் தமிழ்ச் சமூகத்தின் இளையோரை, திரட்டுவதற்கு சமூக ஊடகங்கள் ஆற்றி வருகிற பணி முகாமையானது.

இச்சிக்கல்களும், இவை குறித்த விவாதங்களும் தமிழ்த் தேசியம் என்ற கருத்தியலை மைய இழையோட்டமாகவே கொண்டு இயங்குகின்றன. எனவே, இப்பிரச்சினையில் தமிழ்த்தேசியர்களும், தமிழின உணர்வாளர்கள் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டியது அவசியமானது.

புதுவை இரவி, சின்மயி பிரச்சினையில் தமிழகத்தின் இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008இன் பிரிவு 66-A பாய்ந்துள்ளது. இப்பிரிவின்படி, பிறர் மீது அருவருப்பான, அச்சுறுத்தக்கூடிய, தொந்தரவு தரக் கூடிய, ஆபத்து விளைவிக்கக் கூடிய, இழிவுபடுத்தக்கூடிய, மனதை காயப்படுத்தக்கூடிய, பகைமையைப் பரப்பக் கூடிய, வெறுப்பைப் பரப்பக்கூடிய, தகவல்களை மின்னணுக் கருவிகள் மூலமாக பரப்புவது தண்டனைக்குரியக் குற்றம் ஆகும்.

இதனை கூர்ந்து கவனித்தால், எந்தத் திறனாய்வையும் குற்றச் செயலாக கொண்டு வந்துவிட முடியும் என்பது தெளிவாகும்.

சோனியாவின் மருமகன் இராபர்ட் வதேரா அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துக் குவித்ததைவிட, நிதியமைச்சர் மகன் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பதவியைப் பயன்படுத்தியும், தான் அனைத்திந்தியக் காங்கிரசுக்குழு உறுப்பினர் என்ற பதவியைப் பயன்படுத்தியும், சொத்துக் குவித்திருக்கிறார் என்று சமூக ஊடகத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்வதே அருவருப்பானது, மனதைக் காயப்படுத்தக்கூடியது, தொந்தரவுத் தரக்கூடியது என குற்றம்சாட்டப்படுகிறது. சின்மயி பிரச்சினையிலும், மம்தா பானர்ஜி பிரச்சினையிலும் இவ்வாறான குற்றச்சாட்டுகளே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இக்குற்றங்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை மற்றும் தண்டம் ஆகிய தண்டனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. தண்டத்தொகை எவ்வளவு என்பதை நீதிமன்றம் தான் முடிவு செய்யும்.

கார்த்தி சிதம்பரத்தின் மீதோ அல்லது பிறர் மீதோ இதே போன்ற ஊழல் குற்றச்சாட்டை ஏடுகளுக்கு நேர்காணலில் கூறினாலோ, கட்டுரை வாயிலாக எழுதினாலோ, பொது மேடைகளில் பேசினாலோ அவற்றுக்கு எளிதில் தண்டனை பெற்றுத் தந்துவிட முடியாது. உண்மையில், நாள் தவறாமல் எல்லாப் பொது ஊடகங்களிலும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் விவாதிக்கப்பட்டுதான் வருகின்றன. அரவிந்த் கெஜ்ரிவால் உலகப் பத்திரிக்கையாளர்கள் பலரையும் அழைத்து, தொலைக்காட்சிகளின் கேமராக்களுக்கு முன்னால் புதுவை இரவி போல் பேசினால் அவர் மீது இச்சட்டம் பாய முடியாது.

சட்டத்தின் முன் அனைவரும் சமமில்லை என்ற அரச உண்மையைத்தான் இது காட்டுகிறது.

சமூக ஊடகங்களில், காரசாரமாக விவாதம் நடத்தினாலே யாராவது ஒருவர் மற்றவர் மீது இதே வகைக் குற்றச்சாட்டை கூற முடியும். சின்மயி பிரச்சினையில், இவ்வாறு தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இராசனும், சரவணக்குமாரும் கூறுவதை பெண்ணுரிமை என்ற பெயரால் எளிதில் புறக்கணித்துவிட முடியாது.

சின்மயி மீனவர்கள் சிங்களப்படையால் இனப்படுகொலை செய்யப்படுவதை மீனைக் கொல்வதோடு ஒப்பிட்டுள்ளதை, யாரும் அருவருப்பான, அச்சுறுத்தக்கூடிய, பகைமையைப் பரப்பக்கூடிய செயல் என்றோ, இனக்கொலையைத் தூண்டினார் என்றோ குற்றம்சாட்டி காவல்துறையை அணுகவில்லை. ‘So called தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருத்தப் பதிந்த போது, சின்மயியின் பார்ப்பனத் திமரைக் கண்டு கொந்தளித்தார்கள். ஆனால், இராசனும், சரவணக்குமாரும் பிறரும், இதை சமூகத்தில் நடக்கும் விவாதத்தின் ஒரு பகுதியாகவே எதிர் கொண்டனர்.

எப்போதும் ஆதிக்கக் கருத்தில் உள்ளவர்களுக்கும், விடுதலைக் கருத்தை முன்வைப்போருக்கும் இந்த அணுகுமுறை வேறுபாடு இருந்து கொண்டே இருக்கிறது. எடுத்துக்காட்டாக, கடவுள் மறுப்பாளர்கள் வரலாற்றில் எந்தக் காலத்திலும், பொதுவாக வழிபாட்டு இடங்களை அழித்ததில்லை. கருத்தைக் கருத்துத் தளத்தில் தான் அவர்கள் எதிர் கொண்டார்கள். ஆனால், ஒரு மதத்தைச் சார்ந்த கடவுள் நம்பிக்கையாளர்கள் தான், இன்னொரு மத வழிபாட்டிடத்தை அழித்திருக்கிறார்கள். இப்போதும், அது தான் தொடர்கிறது.

கருத்துக் களஞ்சியங்களான நூலகங்களை எரிப்பது, ஓலைச்சுவடிகளை அழிப்பது ஆகிய குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் ஆதிக்கவாதிகளே ஆவர்.

இப்போதும், காவல்துறை உதவியோடு கருத்தியல் செயல்பாட்டாளர்களை தாக்குபவர்கள் ஆதிக்கவாதிகள் அல்லது ஆதிக்கக் கருத்தியல்களுக்கு உட்பட்டவர்களாகவே இருப்பதை பார்க்கிறோம். இது தற்செயலானதல்ல. கருத்துக் களத்தில், தாங்கள் வலுவிழக்கும்போது, ஆதிக்கக் கருத்தியலாளர்கள் அடக்குமுறையையே துணைக்கு அழைக்கிறார்கள். இதற்கு ஏற்பவே, சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2008இன், பிரிவு 66-F, இந்த உண்மையை இன்னும் தெளிவாக்கும். ஏற்கெனவே இருந்த, 2000ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் திருத்தங்கள் செய்து, 2008இல்  இப்பிரிவுகள் சேர்க்கப்பட்டன என்பது கவனங்கொள்ளத்தக்கது.

இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு, ஒருமைப்பாட்டுக்கு, பாதுகாப்புக்கு, இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் தகவல்களைப் பரப்பினால் மூன்றாண்டு சிறை, அத்துடன் ஐந்து இலட்சம் ரூபாய் அபராதம் என இப்பிரிவு கூறுகிறது.

இது போதாதென்று, 2011ஆம் ஆண்டு இச்சட்டத்தில் மேலும் சில கொடும்பிரிவுகள் சேர்க்கப்பட்டன. இத்திருத்தச் சட்டத்தின் 3(2)(b), 3(2)(g) பிரிவுகளின்படி, இனவாதத் தன்மையுடைய, பல்வேறு மொழியினங்களுக்கிடையில் பகைமையைத் தூண்டக் கூடிய அல்லது அச்சுறுத்தக் கூடிய அல்லது தீமைப் பயக்கக்கூடிய, அல்லது சட்ட விரோதத் தன்மையுடைய அல்லது வேறு வகையில் எதிர்க்கப்பட வேண்டிய தகவல் பரிமாற்றங்கள் தண்டனைக்குரியக் குற்றங்களாகும்.

இந்தியாவின் நட்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு எதிராக கருத்துப் பரப்புவதும் தண்டனைக்குரியக் குற்றமாக இச்சட்டம் கூறுகிறது.

இதன்படி பார்த்தால், தமிழின உணர்வாளர்கள் அன்றாடம் பகிர்ந்து கொள்கிற இணையத் தகவல்கள் அனைத்துமே தண்டனைக்குரியக் குற்றங்களாகிவிடும். மார்வாடி ஆதிக்கத்தை எதிர்த்தோ, மலையாளிகளின் அடாவடியை எதிர்த்தோ, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தோ கருத்துப் பகிர்வதே இனங்களுக்கிடையில் பகைமையை ஏற்படுத்துவதாக, சமூகங்களுக்கிடையில் பதட்டத்தை ஏற்படுத்துவதாக வகைப்படுத்திவிட முடியும். தண்டனைக்குரியக் குற்றங்களாக பதிவு செய்து விட முடியும்.

ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை எதிர்த்து கருத்துகளைப் பதிவு செய்தால் அதுவும் நட்பு நாட்டிற்கெதிரான குற்றச்செயலாக ஆக்கப்பட்டுவிட முடியும். கூடங்குளம் அணுஉலையை மூடு என்பது சமூகத்திற்கு தீமை பயக்கக்கூடிய கருத்துப் பரப்பல் என வகைப்படுத்தி 66-Fஇன் கீழ் வழக்குத் தொடுக்க முடியும்.

ஒட்டு மொத்தத்தில், தமிழின உணர்வாளர்களின் கருத்துப் பதிவுகள் அனைத்துமே குற்றச் செயலாக ஆக்கப்பட முடியும்.

எனவே தான், தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு எதிராகவும், காவல்துறை அச்சட்டத்தை பயன்படுத்தி உணர்வாளர்களை துன்புறுத்துவதற்கு எதிராகவும் திரளுவதில் தமிழின உணர்வாளர்கள் முதன்மைப் பங்காற்ற வேண்டியது மிக அவசியமாகிறது.

உண்மையில், இச்சட்டப்பிரிவுகள் அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 19(1), 19(2) ஆகியவற்றுக்கு எதிரானவை ஆகும். கருத்துரிமைகளைப் பறிப்பவை ஆகும்.

புதுவை இரவி, தமிழகத்தில் இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது இச்சட்டத்தின் கொடும்பிரிவுகளின் கீழும், பிற சட்டங்களின் கடும்பிரிவுகளின் கீழும் காவல்துறை வழக்குத் தொடுத்திருப்பது சமூக ஊடகத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்யும், தமிழின உணர்வு செயல்பாட்டாளர்கள் அனைவரையும் அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதே ஆகும். இதன் விளைவுகளை இப்போதே சந்தித்து வருகிறோம்.

காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சி, பலரும் சமூக ஊடகத்தின் விவாதக் களங்களிலிந்து ஒதுங்கி வருகிறார்கள். இது ஆபத்தானது. இது தொடர அனுமதிக்கக் கூடாது. சின்மயி ஒரு பெண் என்பதை வைத்து, இந்தக் கடுமையான காவல்துறை அச்சுறுத்தலை கவனிக்கத் தவறக் கூடாது. சின்மயியை மட்டுமல்ல வேறு எவரையும் கூட தனிப்பட்ட முறையில் தாக்குவதை விவாதத்தில் பங்குபெறுபவர்கள் கண்டிக்காமல் விடக்கூடாது. ஆனால், அதற்காக மையமான பிரச்சினையிலிருந்து திசைத்திரும்பிவிடவும் கூடாது.

இங்கு மையமான சிக்கல் சமூக ஊடகத்தளத்தில் அரசும், காவல்துறையும் தொடுத்துள்ள தாக்குதலே ஆகும். தமிழின உணர்வாளர்களும் கருத்துரிமையில் அக்கறையுள்ளோரும் இரவி, இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது காவல்துறையில் தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்த வேண்டும். காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டிக்க வேண்டும்.

சின்மயி, கார்த்தி சிதம்பரம் ஆகியோர் புகாரின் மீது விரைந்து செயல்பட்ட காவல்துறை, இது போன்ற வேறு புகார்களின் மீது எவ்வளவு மெத்தனமாக நடந்து கொண்டது என்பதை அனைவரும் அறிவார்கள். இக்கொடிய சட்டத்தை உயர் அதிகாரத்தில் உள்ளவர்கள் அல்லது அதிகார மையங்களுக்கு நெருக்கமானவர்கள் தங்களுக்குச் சாதகமாக எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்கு இந்நிகழ்வுகள் தெளிவான சான்றுகளாகும்.

எனவே, இரவி, இராசன், சரவணக்குமார் ஆகியோர் மீது காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளைக் கண்டித்தும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கொடும்பிரிவுகளை எதிர்த்தும் கருத்துரிமையில் அக்கறையுள்ள அனைவரும் கைக்கோக்க வேண்டிய அவசர, அவசியம் எழுந்துள்ளது.

இப்பிரச்சினை குறித்து, சமூக ஊடகங்களிலும் பிற ஊடகங்களிலும் வலுவான விவாதங்களை எழுப்புவதோடு மட்டுமின்றி, நேரடி இயக்கங்களிலும் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. காவல்துறையின் இவ்வழக்குகளை எதிர்த்தும், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கொடும் பிரிவுகளை எதிர்த்தும், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் போன்ற மென்மையான நேரடி நடவடிக்கைகளிலாவது ஈடுபட தமிழின உணர்வாளர்களும், கருத்துரிமையில் கவனங் கொண்டவர்களும் அணிதிரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இதுகுறித்து, ஒத்தக் கருத்துள்ளவர்கள் கலந்துரையாடி முடிவெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்பது என் விருப்பம்.

 (செய்தி : த.தே.பொ.க.செய்திப்ம் பிரிவு)

வியாழன், 19 ஜூலை, 2012

புதுச்சேரியில் தமிழ்க் கணினி வல்லுநர் ஆண்டோ பீட்டர் நினைவஞ்சலிக் கூட்டம்


தமிழர்களிடையே தமிழ்க் கணினி குறித்து விழிப்புணர்வு செய்ய பல்வேறு நூல்களை எழுதியவரான ஆண்டோ பீட்டர் அவர்களுக்கு புதுச்சேரியில் நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 22-07-2012 அன்று காலை 9.30 மணியளவில் வணிக அவை சிறிய அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரியின் பல்வேறு தமிழறிஞர்களும் தமிழ்க் கணினி ஆர்வலர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர்

 தமிழ்க் கணினி குறித்த விழிப்புணர்வைத் தமிழர்களிடையே அதிகப்படுத்தியவர்களில் ஆண்டோ பீட்டரும் ஒருவர். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தார். கணினி, இணையம், அச்சுத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் ஆண்டோ பீட்டர். மென்பொருள் தயாரிப்பு, இணையப் பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர்.

தமிழகத்தில் முதன்முதலாகப் பல்லூடகக் கல்வியை அறிமுகப் படுத்திய இவர் இளைஞர்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாட்டிற்காக 500க்கும் மேற்பட்ட இலவச கருத்தரங்குகளை நடத்தியுள்ளார்.

கணினி, தமிழ் தொடர்பான பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டிருப்பதுடன் 26 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளார்.
 
அச்சு வடிவில் வந்து கொண்டிருக்கும் இதழ்களில் இருக்கும் படங்கள், செய்திகள் மற்றும் அனைத்துவிதமான படைப்புகளையும் இணைய தளங்களில் அச்சு இதழ்களைப் போன்று பகுதிகளாகவும், பக்கங்களாகவும் அனைவரும் பார்க்கவும் படிக்கவும் உருவாக்கப்பட்ட இணைய இதழ்களில் முதல் தமிழ் இணைய இதழான "தமிழ் சினிமா" எனும் பெயரில் முதல் தமிழ் இணைய இதழைத் தொடங்கியவர்.  

கணினித் தமிழ்ச் சங்கத்தின் தலைவராகவும் இந்திய அரசு, தமிழ்நாடு அரசு அமைத்துள்ள சில குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தமிழும் கணிப்பொறியும்எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலுக்கான பரிசு - 2004. நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளருக்கான விருது 2007.

ஸ்ரீராம் நிறுவனத்தின் பாரதி இலக்கியச் செல்வர் விருது’, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் பெரியார் விருது’. ஆகிய விருதுகளை பெற்றவர்.

கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின்  நிறுவனரும், கணித்தமிழ்ச் சங்கத்தை நிறுவிப் பணிபுரிந்தவரும், பல கணினி நூல்களின் ஆசிரியருமான மா.ஆண்டோபீட்டர் 12.07.2012 வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் காலமானார். இவரின் மறைவு தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பாகும்.

வியாழன், 14 ஜூன், 2012

தமிழில் எளிய வகையில் போட்டோசாப், (PHOTOSHOP-CS4) கோரல் டிரா, (C0RELDRAW-X4) டிரீம்வியூவர், (DERAMWEAVER CS4)  உள்ளிட்ட மென் பொருள்களை உபயோகிக்க தமிழில் எளிய விளக்கத்துடன் கூடிய வீடியோ வடிவிலான குறுந்தகடு "தமிழ் வழி சாப்ட்வேர் கல்வி" என DIGITAL MEDIA நீறுவனத்தினர் வெளியிட்டுள்ளார்கள். 
 
உண்மையிலேயே மிகவும் பயனுள்ள ஒரு குறுந்தகடாகும் இது. இந்த குறுந்தகட்டில் அடிப்படையை செய்தி களைக்கூட மிகச் சிறப்பாக இவற்றை விளக்கியுள்ளனர். அனைவரும் வாங்கிப் பயன்பெறலாம்.
போட்டோசாப், (PHOTOSHOP-CS4)

போட்டோசாப் மென்பொருள் உபயோகிக் கும் முறை குறித்து "இ.கிரிசுடோபர் விசய்" என்பவர் விளக்கியிருக்கிறார். நல்ல குரல் வளம் மிகச் சிறப்பாக விளக்கியிருக்கிறார். அவர் பாடங்களை விளக்க அவர் பின்பற்றியிருக்கும் முறை எனக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. புரியும் படி விளக்குகிறார். கருவிப் பட்டையில் (TOOL BAR) உள்ள ஒவ்வொரு கருவியையும் (TOOL) எப்படி பயன் படுதுவது என்பதை மிக அழகாக விளக்குகிறார்.


அதோடு இல்லாமல் அதே போன்ற வேறு கருவிகளை உபயோகிக்கும் போது, இந்த கருவிக்கும் அந்த கருவிக்கும் உள்ள நிறை குறைகளையும் அவ்வப்போது விளக்குகிறார். மேலும், மற்ற கருவிகளை உபயோகிக்கும் போதும், ஏற்கனவே விளக்கப்பட்ட கருவிகளைப் பற்றி நடுநடுவே பேசி விளக்கி அவை மறந்து போகாமலும் உள்ளவாறு பார்த்தும் விளக்கியுள்ளார்.

குறுந்தகடின் இறுதியில் போட்டோசாப்CS5 , (PHOTOSHOP-CS5) இல் புதிதாக என்னென்ன வசதிகள் அளித்துள்ளனர் அதை உபயோகிப்பது எப்படி என்பதையும் விளக்குகிறார்.

இந்த குறுந்தகடின் விலை ரூ.200 என குறிப்பிட்டுள்ளார்கள். வெளியில் கற்றால் இதன் மதிப்பு ரூ.2000 அளவுக்கு மேல் மதிப்புடையது என நான் கருதுகிறேன்.

கோரல்டிரா, (C0RELDRAW)
கிரிசுடோபர் விசய் அவர்களின் விளக்கம் போட்டாசாப்பில் அறிந்தேன் கோரல்டிராவிற்கும் அவர்தான் விளக்கம் அளித்திருக்கிறார் என அறிந்து அதனையும் நான் வாங்கினேன். அந்த அளவுக்கு அவர் சிறப்பாக விளக்கம் அளித்துள்ளார், ஆனால் நான் ஏமாந்துவிடவில்லை. கோரல்டிராவிலும் அவர் மிகச்சிறப்பாக அசத்தியுள்ளார். இதிலும் ஒவ்வொரு கருவியாக மிகச்சிறப்பாக விளக்கும் முறை நன்றாக உள்ளது. இது போன்ற குறுந்தகட்டில் உள்ள வசதி என்னவென்றால் நாம் எப்போது வேண்டுமானாலும் நேரம் கிடைக்கும் போது கற்றுக் கொள்ள முடியும்.

வெப் டிசைனிங், (WEB DESIGNING)


இந்த குறுந்தகடில் இணைய தள வடிவமைப்பு பற்றி வைதியநாத் என்பவர் விளக்கியுள்ளார். இதில் அடிப்படைகளை நன்றாக விளக்குகிறார்.

முதல் இரண்டு பாடங்கள் எச்.டி.எம்.எல் பற்றியும் அடுத்த பாடங்கள் அடோப் டிரீம்வியூவர் மென்பொருளில் இணைய தள வடிவமைப்பு பற்றி விளக்குகிறார். அடுத்து "ஜாவா ஸ்கிரிப்ட்" பற்றியும் விளக்குகிறார்.

இதுவும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனினும் இவர் மிகவும் தொடக்கத்தில் உள்ள கணினி உபயோகிப்பாளருக்கு பாடம் சொல்லித் தருவது போல் சொல்வது கொஞ்சம் விறுவிறுப்பில்லாமல் இருந்தது. உதாரணமாக "நகல் எடுத்தல்" "ஒட்டுதல்" போன்ற அளவில் மிகவும் தொடக்க நிலையில் உள்ளவர் அளவுக்கு எளிமை இருந்தது. இதனால் அடிப்படை அறிந்தவர்களுக்கு கொஞ்சம் பொறுமை இழக்க வேண்டியிருக் கலாம். சில இடங்களில் ஏற்கனவே விளக்கிய அதே செய்தியை இவர் சொல்லும் போது கொஞ்சம் பொருமை இல்லை. எனினும் பயனுள்ளது.


பிளாஷ், (FLASH)


பிளாஷ் மிகவும் பயனுள்ள ஒன்று. எனினும் இதனை பார்த்தபின் முழு அளவில் கற்றுக்கொள்ள இயலும் என்று கருத முடியவில்லை.

மற்றும் எம்.எஸ் ஆபிஸ் வேர்டு, மற்றும் எக்செல், மற்றும் டேலி ஆகியவை மிகவும் சிறப்பாக செய்துள்ளார்கள். எக்செலில் மற்றும் பல்வேறு முறையில் பயன்படுத்து என்பது பற்றி விளக்கமளிக்கும் விதம் மிகவும் நன்றாக இருக்கிறது. அவசியம் வாங்கலாம். பயனுள்ளது
.